Showing posts with label இதயம் பேசுகிறது கவிதை வரிகள். Show all posts
Showing posts with label இதயம் பேசுகிறது கவிதை வரிகள். Show all posts

Thursday 11 May 2017

வசந்தம்


















வசந்த காலத்தின் 
வாயில் திறக்கையில் 
களிப்புடன் நுழைந்து 
கவலைகள் மறந்து 
சிட்டுக்களாய் பறந்து 
ஞாலம் தரும் சால அழகில் 
நெகிழ்ந்து 
கண்டதெல்லாம் தின்று பல
கலோரிகள் வென்று
குண்டும் மண்டுமாகாமல் 
குதித்து விளையாடுங்கள் 
வரையறுக்கப்பட்ட வாழ்வின்
வழிப்போக்கர்கள் நாங்கள்
வழித்தடங்கள் பறிபோனால் என்ன 
நினைவுகளை பற்றிச்செல்வோம்
சுரேஜினி பாலகுமாரான்

ஊசி வாடை



அவ்வப்போது வந்து போகும் சலிப்பு
யார்மீதோ கொண்ட வெறுப்பு
பொறாமையில் சிதறும் போட்டிகள்
உறவுகளை உடைக்கும் அலட்சியங்கள் 
அள்ளி வீசும் அவசர வார்த்தைகள் 
எள்ளி நகையாடும் ஏளனங்கள்
சொல்லி மாளாத புலம்பல்கள் 
எல்லாம் துடைத்து வீசும் 
நெடிகள் அவை
ஆன்மீகம் கற்றுத்தராத பாடம்
ஆலயம் அளித்திடாத ஞானம்
நிலை உணர்த்தும் காட்சிகள்
மாயை தள்ளாட 
 மயக்கம் தெளிய வைத்து
வாழ்வை மீளளிப்பு செய்யும் இந்த 
வைத்தியசாலை அவஸ்தை நேரங்கள்
ஆம் 
குத்திக்குத்தி
குணப்படுத்தும் ஊசி 

கவுத


இரவோடு பகலையும் 
இணைத்தே 
நனைத்தபடி ....நீயும் 
மணிக்கொரு தேநீரை
அணைத்தபடி நானும்.....
ஈர மனதுடன் 
உவகையில் துளிர்க்கின்ற 
தளிர்களை கொஞ்சியபடி
இளவேனிற்காலத்தின்
சத்தமிடுகிறது
சாரல் துளிகள்









Thursday 2 February 2017

என்னால் நான் ........


வருடங்கள் உருண்டு ஓடிக்கொண்டு இருக்கிறது
வழக்கம் போலவே என்னிடம் ஒரு கேள்வி - நான்
வாழ்ந்து கொண்டு இருக்கிறேனா??
ஆம்
சுவாசிப்பதால் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதையும் தாண்டி
சுவாரஸ்யமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்
ஆம்
வருந்தி உழைத்து வந்த 
வருமானத்தின் பெரும்பகுதியை 
சேமிப்பில் புதைக்க எண்ணி - வரும் 
நாளைய சந்தோசங்களுக்காக
என்னை 
 மேலும் வருத்தி வருத்தி 
இன்றைய வாழ்வை தொலைக்கவில்லை
ஆகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
அடுத்தவரின் உடலுழைப்பில் குளிர்காயும் எண்ணம் இல்லை
யாரையும் இடையூறு பண்ணவும் நேரமில்லை
ஒப்பிட்டு பார்த்து போட்டிகள் போட்டதில்லை
ஆகவே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
இருப்பினும் வாழ்க்கை ஓட்டத்தில் 
நான் வெறுக்கவும் படுகிறேன் சிலரை
வெறுக்கவும் செய்கிறேன்
என் வார்த்தைகள் என்னை மீறுகின்றதையும்
தவறுகள் என்வழி தாண்டவம் கொள்வதையும் 
என்னால் உணர்ந்து திருத்திக்கொள்ள முடிகிறது
ஆகவே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
என் அன்புக்கு தகுதியானவர்கள் 
எத்தொலைவில் இருப்பினும் தினமும் என் 
மனக்கண்ணில் நிழலாடி
உறவாடிக்கொண்டே இருக்கிறார்கள்.
என் நேசத்திற்கு உரியவர்களுக்கு நான் பாசாங்கு காட்டியதில்லை
என் பாசத்தையும் நேரத்தையும் 
அர்ப்பணிக்க தயங்கியதில்லை
ஆகவே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
பனியில் உணவின்றி ஆங்காங்கே ஒளித்திருக்கும் 
சின்ன குருவிகள் பற்றி என் நாளாந்த சிந்தனையில் இடம் இருந்தாலும்
சில எதிர்மறை எண்ணம்கொண்ட
மனிதர்கள் குணம் கண்டு 
பயத்துடன் ஒதுங்கவே செய்கிறேன்
என் மகிழ்ச்சித் தருணங்களை அவை
மென்று விழுங்கி விட கூடாது என்பதற்காக....
ஆகவே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
வாழ்வின் இறுக்கமான சூழல்களையும்
போராட்டங்களையும் வென்று வெளியேறவும் 
சத்தமின்றி என் கவலைகளுக்கு தாழ் போடவும் 
யாருக்கும் அச்சம் இன்றி என் வழி செல்லவும் 
இஷ்டமுடன் பழகிக்கொண்டதால் நான்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்
பிறரை தனிப்பட்ட கேள்விகளால் குடைந்து 
விபரம் அறிவதில் ஆர்வமில்லை
வீண்பழி சொல்லவும் விளைந்ததில்லை
அடுத்தவர் பற்றிய வேண்டாத பேச்சுக்கு
என் விலையற்ற நிமிடங்களை 
செலவிட்டு மகிழ்ந்ததில்லை
ஆகவே நான் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்
என் ஒவ்வொரு சின்னஞ்சிறு அசைவுகளையும்
ஆர்வமுடன் மகிழ்ச்சியாக்கி கடந்து செல்லும்படி 
மாற்றி அமைக்கிறேன்
ஆம் இதே போலவே வாழ்ந்து மறைய விளைகிறேன்
நிகழ்கால மகிழ்ச்சியை அடியோடு அடகு வைக்கும்
எதிர்கால சாதனை எனக்கு வேண்டாம் எனும்
சாதாரணமானவளாகவே வாழ்ந்துவிடுகிறேன்
இல்லை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
என் தாய் என்னை 
டாக்டர் ஆக்கியிருந்தால் மகிழ்வதை விட
என் தந்தை கோடி சொத்துக்களை 
அள்ளி வழங்கியிருந்தால் மகிழ்வதை விட
என்னுள் எதையும் திணிக்காமல் 
போட்டி பொறாமைகளை விதைக்காமல்
மகிழ்வையும் நின்மதியையும் 
உற்பத்தி செய்து 
வாழும் கலை அறியும் அணுகுமுறை 
எனுள் தன்வழியே உறைய வழிவிட்டதனால் 
சாதாரண மனுஷியாய் பெருமையுடன்
வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறேன்.
கரையாத சேமிப்பே வாழ்வென்று 
விடியாத விடியலுக்காய் 
களைத்து திளைத்து ஒரு நாள் விழித்து பார்க்கையில் 
எல்லாம் விலகி போனது உணர்ந்து 
நொடிந்து மீதி காலமும் கடந்து
மடிந்து போவதில் எனக்கு உடன்பாடு இல்லை ஆகவே
நான் வாழ்ந்து கொண்டே இருக்கிறேன்.
நல்லெண்ணங்களுடனும் 
மிகுந்த புத்துணர்ச்சியுடனும்
எல்லோரும் எல்லாமும் கிடக்கப் பெறவும் 
கிடைத்ததை வைத்து மகிழ்ந்து வாழவும்
வாழ்வின் ஒரு வருடம் குறைந்தாலும் 
கடந்த வருடத்தின் 
பெற்றுக்கொண்ட இன்பங்களை, பாடங்களை 
 மனம் நிறைய எடுத்துக்கொண்டு 
அடுத்த வருடத்தை வாழ்ந்து வளமாக்க அழைக்கிறேன்.
நன்றியுடன் சுரேஜினி பாலகுமாரன்
தங்யூ 2016 அண்ட் வெல்கம் டு 2017 



Monday 23 January 2017

சொத்து



ஊனை சுருக்கி
உன்னை உருக்கி
வாழும் வாழ்வில் பயனேது?
சேர்த்ததெல்லாம் கொண்டுபோக 
கல்லறைக்குள் இடமேது?

எண்ணமே வாழ்வு




அடுத்தவர் நம்மை இகழ்வது 
போலொரு பிரம்மை 
நம்மேல் பொறாமை 
என்றெண்ணி கடுப்பு 
அப்படியே என்னை நானாகவே 
ஏற்றுக்கொண்டு விடு 
தர்க்கம் வேண்டாம் 
என்றொரு தவிப்பு 
நான் வாழும் வாழ்வே உயர்ந்தது 
எனும் இறுமாப்பு 
என்னை பற்றி உயர்வாக 
எண்ண வைக்கபடும் பெரும்பாடு 
இது என்ன எதிர்பார்ப்பு. ? 
எங்கே போகிறது எம் வாழ்வு?..

நட்பெனும் நாடகம்




பொய்யை மட்டுமே பேசும்
உன்னை
உண்மையான நண்பன் என்பதா?
அற்பத்திலும்
குற்றம் காணும் உன்னை
உற்ற நண்பன் என்றுரைக்கவா?
நான் வீழும்போது
மகிழும் உன்னை
தோழன் என்றழைக்கவா?
பொங்கிடும் பொறாமை
உன்னிடம் கண்டபின்
நட்பென்று உன்னை நாடவா?
உன் தேவைகள் முடிக்க
தேனாகப் பேசும் உன் பெயர்
ஆருயிர் நண்பனா?
நீ பெற்ற நன்மைகள் 
பெற்றுவிடக் கூடாதென்று
கூடவிருந்து குழிபறிக்கும்
நீ நண்பனா
இல்லை நரியா?
போலி உறவுக்கு 
நட்பென்ற வேலியிட்டு
காவல் செய்யும் நான் 
நாயா நண்பனா?

நீயிலாத நான்



சோரும் விழி நோகும் வலி 
தேடுகின்றேன் உன் முக(ம்)வரி 
எத்தனை நாட்களை உன் 
நினைவிற்காய் பலி கொடுத்தும் 
என் மாளும் உயிர் மீட்க 
இன்னுமேன் வரவில்லை 
நீ நின் நினைவுகளை வென்றெடுக்க 
என் இரவுகள் விழித்திருக்க 
வெறுமை எனை தத்தெடுக்க 
சூரியோதயம் பார்க்கையில் கூட 
உன் விரல் கோர்க்க தவிக்கும் 
என் மனசுக்கு உன் பதில் வேண்டும் 
மழை தரும் இரவில் உன் ஸ்பரிஷம் 
தொலைத்த பரிதவிப்பில் 
கரைந்து மடியும் என் வாழ்வுக்கு 
உடனடியாய் நீ வேண்டும் 
நீயற்ற என் வாழ்வு சீரற்று 
தடுமாற வேண்டாம் 
இடைவெளி வந்துவிடு.....

நேசிக்கப்பிறந்தவள்



அளவற்ற நேசம் 
அதை வெளிப்படுத்த 
வார்த்தைகளை தேடாத சிறப்பு
உரிமைகளில் தலையிடாத 
வெறுக்க வைக்காத வார்த்தைகள்

ஆபத்தில் நீட்டும் கரங்கள் 
எதிர்பார்ப்பு இல்லாத அன்பு 
ஏளனம் செய்யாத தெளிவு. 
தமக்கு நிகராய் கொடுக்கும் மதிப்பு. 
எவரையும் தூற்றாத பணிவு .

தோழமையாய் தாயாய்
தந்தையாய் சிகரங்களாய் 
உடன்பிறப்புகள் இருக்கையில் 
எனக்கில்லை வாழ்வில் சலிப்பு 
யாரும் வம்பிழுக்க நினைத்தால் 
அவர்கள் என் கால் செருப்பு .

எதுக்கு இந்த முறைப்பு . 
எனக்கில்லவே இல்லை செருக்கு. 
கழட்டி போட்டு 
எடுப்பேன் ஓட்டம் அடுத்த தெருக்கு.

வரம் அம்மா



அம்மா 
கவலைகள் என்னை முள்
கிளைகளாய் துளைக்கும் போது
உனை கட்டி அழ ஆசைப்படுகிறேன்
நீயில்லை
உயரத்தில் பறந்து நான்
தூரத்தில் வந்தாலும்
துயரத்தில் உன் குரல்
இதயத்துள் இன்னும்
இதமாய் ஒலிக்கிறது
அம்மா
நான் முதல் முதலாக 
உச்சரித்த அதே வார்த்தை
சின்ன வலிக்கும்
வாய்விட்டு
கதறி அழைக்கிறேன்
அருகில் நீ 
இல்லையென்று தெரிந்தும் கூட.......
என்னை பிரிந்தததில்
உனக்கு ஆனந்த வேதனை
உன்னை பிரிந்ததில் எனக்கு
ஆனந்தம் விடை பெற்றுவிட்டதம்மா
போலி முகங்கள் பல
நான் கண்டுணர்ந்த போது
கபடமில்லா உன் முகம் - என்னை 
தோழில் சாய அழைக்கிறது
நிர்ப்பந்தங்கள் சிலவற்றால் 
நம் பந்தத்தை நாமே
சிறைக்குள் 
அடைத்துவிட்டோம் அம்மா
நான் கண்ணீர் வடிக்கையில் 
துடைத்த உன்கரம்
இறைவனிடம் எனக்காக தினம்
கூப்புகின்ற உன் கரம்
எனை அள்ளி அணைத்த உன் கரம்
என் அருகில்  இருந்தாலே அது வரம்
இந்த கவி வரையும் நேரத்தில் நான்
அழுது துடைக்கொண்டேன்
அறிவாயா நீ இந்த உண்மை.

வாழாத வாழ்வு




முந்தை நாள்
எஞ்சியதை உண்டு
மிஞ்சிய பணத்தை எண்ணி
எனக்குள் சந்தோஷம்
பலர் கூடிக் களிக்கும்
உறவுகள் வருகை 
வெட்டி செலவென்று
எதையோ சொல்லி ஒதுங்கி
வென்று விட்டதாய் புளாங்கிதம்
எங்கோ மலிவென்று 
யாரோ சொன்னதை கேட்டு
மணிக்கணக்காய்  செலவிட்டு
ஒற்றை ரூபாய்
சேமித்த  பூரிப்பு
காலையில் பசித்த பசிக்கு
மாலையில் வீடு வந்து
சிக்கனாமாய் புசித்ததில் 
ஒரு திருப்தி
அடுத்தவர் செலவைக்கேட்டு
அப்பாடா நமக்கு
அற்றுப்போனது இந்த
மேலதிக செலவு என்று
உள்ளூர ஆனந்தம்
பயணங்களை ஒதுக்கி
மகிழ்வுகளை சுருக்கி
பணத்தை பெருக்கிய
பெருமிதம்
ஆசைப்பட்டதெல்லாம் 
அடக்கியே வைத்து விட்டு
சொத்து சேர்த்த பெருமை
தேவைப்பட்டதையெல்லாம்
கொஞ்சநாள் உபயோகம் அவை
வேண்டாம் வேண்டாம் என்று
எல்லோர் தேவைகளையும்
அடகு வைத்து
வாழ்ந்த வாழ்க்கையில் சேர்த்த சொத்து
இன்று பிள்ளைகள் கையில்
தேவைக்கு அதிகமாய் 
கிடைத்த போது
கட்டுக்கடங்கா உல்லாசம்
ஊதாரி செலவுகள் 
ஒவ்வாத பழக்கங்கள்
நம்மை வருத்தி 
கண்ட பலன்
நம்மை வருத்தும்போது 
வலி தாங்க முடியாமல்
தினம் மாளாமல்
மனம் போல் வாழ்ந்து விடுங்கள்.
வாழக்கற்றுக் கொடுப்பதை விடுத்து
உங்கள் வாழ்வை தத்துக்கொடுத்து 
கெடுத்துவிடாதீர்...

வாழ விடு





மாறிக் கொண்டிருக்கும்
காலங்களில்
ஆறிக் கொண்டிருக்கும்
காயங்களில்
கீறிக் கொண்டிருக்கும்
சில கூர் முனைகளைத் தாண்டி
பேசிக் கொண்டிருக்கும்
என் மூச்சு
இன்றும் நின்றுவிடலாம்
ஆகவே 
வாழும்வரை வாழ 
வழிவிடு என்கிறேன் நீயோ 
வலிகளை என் மீது
வாரி எறிகிறாய்
என் சமூகமே.

மெளன விளம்பரம்



வெற்றி மொழி
கற்றுக்கொள்ள 
கடினமாகத்தான் இருக்கிறது
தற்காப்பு ஆயுதம்
தருணத்தில் மறந்து போவதால் - பின்
வருந்தும் வேளைகள் ஆயிரம்
அர்த்தம்
எதை வேண்டினும் சொருகிக்கொள்ள
விட்டுவைக்கும் இடைவெளி
தொகை
எழுதப்படாமல் கையொப்பமிட்ட
காசோலை
மெளனம்
சில நேரம்  வளர்க்கும் பகை
இருப்பினும் நன்மைகள் ஏராளம்
உபயோகி
இது
இலவசம்.

போவதெங்கே என் தேசம்




போர் மேகம் புடை சூழ
யுத்தங்கள் பல கடந்தும்
சிக்கல்கள் குறையவில்லை
இரத்த வெள்ளமொடு
பலத்த அழிவு கண்டும்
நிலத்தில் அமைதியில்லை
சுட்டெரிந்து போகும் போது
எங்கிருந்தோ குரல் கொடுத்தேன்
கெட்டழிந்து போகும்போது 
சுமையோடு சோர்ந்து போனேன்
பட்டபாடு மறந்துபோக 
விட்ட இடம் தொலைத்து நின்றேன்
மரத்துப்போன மனங்களோடு
மறத்தமிழன் வாழ்வுதான் 
பயணிக்கும் திசை மாற்ற
வேண்டும் ஒரு மாற்றம் என்று
மீண்டும் மீண்டும் முயல்வோம்.

எனை நீ பிரிந்தாய்



ஓ....அன்று
அந்த நினைவுகள்தான்
எத்தனை கொடியவை ?
என் மனதைக் கேட்கிறேன் - அது
அழுது துடிக்கிறது
ஐம்புலன்களே நீங்கள்
உறங்கிப் போய்விடுங்கள் என்றேன்
மரண தேவதையே - என்னை
வசூலித்துக்கொள் என்றேன்
இதயச் சுவர்களுக்கு எத்தனை வலிமை
இன்னும் வெடிக்காமல் துடிக்கிறது
துன்பங்களை கைது செய்ய நினைத்து 
பின் சிரிக்கிறேன்
என்னால் கத்தரிக்கவும் முடியவில்லை 
சித்தரிக்கவும் முடியவில்லை
என் பிறந்த நாளை விட - நீ 
எனை பிரிந்த நாள் தான் 
ஆழமாக என்னுள்ளே
வலிப்பதை நீ அறிவாயா????

தென்றல்



அந்த தென்றலின் வரவிற்காய்
அன்றொருநாள் - என் 
இதயக் கதவுகளை
அகலத் திறந்து வைத்தேன்
உறக்கத்தை தொலைத்து 
கற்பனைகளை வாங்கினேன்
பாஷையில்லா மெளனத்தில்
ஆசைகளை வளர்த்தேன்
கனவுகள்கூட கலங்கக் கூடாதென்று
நினைவுகளுக்கு இனிமை கொடுத்தேன்.
திசைமாறி புயலாகி எனை நீங்கி
சென்றது தென்றல்
கற்பனைகளை என்ன செய்வேன்
விற்பனையா செய்ய முடியும்
ஆசைகளை வைத்திருந்து 
பூஜையா புரிவேன்
கனவுக்கும் நினைவுக்கும் 
கடும் தண்டனையா இடுவேன்
வேதனை தணலாகி எரிய
ஊமையாய் மனம் முடங்க
காலம் கட்டளையிடுகிறது
கடந்துபோக வைக்கிறேன்
மறந்து விடு என்று
நானோ தோண்டியே பார்க்கிறேன்
என்னை உறங்கவிடு
நிஜங்கள் கனவாகிப்போனது வலிக்க
கனவிலும் வந்து உறுத்தாதே
என்னில் நிலைக்க மறுத்த - உன்
தடங்களை அழிக்கவிடு.

ஏக்கம்






அம்மா என்றழைக்க 
எனக்கில்லை மகவு
என்னை நானே வருத்தி அழிக்கிறேன்
தாயை போற்றும் உலகு
தவிக்கும் நம்மை
தரம்குறைவாய் நோக்குவதுமேனோ
சுற்றங்கள் கூடுகின்ற வேளைகளில்
குற்றம் இழைத்ததுபோல் 
குனிந்து நிற்கின்றேன்
இது பலருக்குத்தெரியாத வலிகள்
என்  வலிகள் கண்ணீர் துளிகளோடு
எனக்கு மட்டுமே சொந்தமாகின்றன.
ஆளுக்கொரு வடிவில் துன்பங்களை
அளந்து கொடுக்கும் இறைவன் நாளை 
ஆளை மாற்றும்போது யாரும் அகப்படலாம்
ஆகவே நம் காயங்களை குத்தி மகிழாதீர்.

மாவீரர்








நாம் உறங்க தாம் விழித்து 
நமைக்காத்து உயிர்நீத்து
தாமுறங்கும் கல்லறையும் 
தகர்த்து எறியப்பட

தமிழர் நம் மனங்களில் குடிவாழும் 
தமிழ்த்தாய் பெற்றெடுத்த 
தன்னிகரில்லா தன்மான சின்னங்கள்

 உற்றவரும் உடன்பிறப்பும்  கண்மூடி தூங்குகையில்
சற்றும் தடையின்றி 
சுற்றிவரும் உங்கள் நினைவலைகள்

பற்றி எரியும் 
பெற்ற மனத்துயர்
மற்றவர்கள் யார் அறிவார்?

குற்றமிங்கு தமிழராக பிறந்ததென்று
குலை நடுங்கி குற்றுயிராய் செத்தொழியும் 
நிலை மாறி  
நீவீர் சிந்திய குருதியும்
விலையற்ற  தியாகமும் ஒருநாள் ஆளும்

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...