Thursday 11 May 2017

சிறு மாற்றம் பெரு மகிழ்ச்சி {உண்மை சம்பவம் }

அரிசியை வெயிலில் வைத்து எல்லை தாண்டி சிந்தாமல் பரவி விட்ட செல்வாம்பிகைக்கு எல்லையை தாண்டி எங்கெங்கோ சென்றுவரும் சிந்தனைகளை சிதறாமல் சேர்க்க வழிதெரியவில்லை.
ஒரு வித கலக்கமும் மகிழ்ச்சியும் சேர்ந்து சொல்லொணா உணர்வுகள் மனதில் அலைபாய ஒரு கையால் காக்கையை விரட்டியபடி மூழ்கித்தான் போனாள் சிந்தனைக்குள்.
அப்படி என்னதான் சிந்தனை.
வெளிநாட்டில் இருக்கும் மகனின் உதவியுடன் தன் ஒரே மகளை நோர்வே யில் மணம் முடித்து குடுத்திருந்தாள். மகள் கர்ப்பமாக இருப்பது அறிந்து வேண்டிய கடவுளர்களுக்கு எல்லாம் நேத்தி செலுத்தி முடிக்கு முன்னரே
''பிரசவ காலத்துக்கு உன்னை இங்கே அழைக்கிறேன் அம்மா ஆயத்தம் செய்து கொள்''
எனும் மகளின் வார்த்தைதான்
ஆம் பங்குனி பிறந்தால் 58 வயதாகப் போகிறது.அடிக்கடி இடுப்பு பிடித்துக்கொள்கிறது.சக்கரை வேறு அதிகமாகிவிட்டதை மருத்துவர் உறுதிப்படுத்திவிட்டார்.காலைப்பனியில் ஓயாமல் தும்மல் போட வேண்டி இருக்கிறது.கண்கள்வேறு அடிக்கடி புகை படிந்ததுபோல் மாயம் செய்கிறது.
என்னதான் செய்வது வயதானால் எல்லோருக்கும் பொதுவாக வரும் அசெளகரியங்கள்தானே எண்றெண்ணி மெதுவாக எழ முயன்றவளை
பலமாக அழைத்தது கணவன் ரத்தினத்தின் கனமான குரல்.
''எங்கே என் கண்ணாடி ? அரை மணிநேரம் பேப்பர் படிக்க ஒரு மணிநேரம் தேடவேண்டி இருக்கிறதே இந்த கண்ணாடியை. எடுத்து பத்திரமாக வைக்க மாட்டியா ???''
ஆமாம் செல்வாம்பிகையின் கணவணுக்கு சுமை தூக்குதல் போன்ற பெரிய வேலைகள் தான் செய்யத்தெரியும் தனக்கான சிறு சிறு வேலைகள் எல்லாமே மனைவியே செய்து பழகிப்போய்விட்ட நிலையில்
கண்ணுக்கு முன்னால் இருந்தாலும் மனைவி எடுத்துக்கொடுக்காமல் அந்த கண்ணாடியை எடுத்து மாட்ட மாட்டார்.
சுற்று முற்றும் பார்த்து ஒரே நொடியில் எடுத்துக்கொடுத்தவளின் சிந்தனை ஓட்டம் மட்டும் முடிவுக்கு வந்ததாக இல்லை.
Blog image
எல்லோரும் சொன்னார்கள் உனக்கென்ன கொடுத்து வைத்தவள் ,இந்த வயதில் வெளிநாடெல்லாம் போக கிடைத்திருக்கிறது என்று.எல்லோரும் பெருமையாக பார்ப்பதை ரசித்தாலும் சம்மந்தபட்டவளுக்குத்தானே அதன்
மறுபக்கத்தை சிந்திக்க வேண்டிய தேவை இருக்கும் .
பாட்டன் முப்பாட்டன் என்று பிறந்து வளந்த நாட்டின் காலையில் சில்லிடும் இம்மியளவு பனியே ஒத்துக்கொள்ளவில்லை, வயசான காலத்தில் நம்மையே யார் பார்ப்பார்கள் என்ன செய்ய போகிறோம் என்று இருக்க ,
மருந்தும் மாத்திரையும் அதிகமாகிக்கொண்டு போகும் இந்த நிலையில், கடல் தாண்டி அதுவும்,
64 வயதாகியும் கைக்குழந்தைபோல் இன்னும் அடம்பிடிக்கும் கணவனை சொந்தங்கள் உதவியில் விட்டு தன்னந்தனியே பழக்கமில்லாத ஊருக்கு எப்படி போவேன் அங்கே போய் எனக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று
இதயம் படபடக்க, தண்ணீரை எடுத்து குடித்து மறைத்துக்கொண்டாள்.
ஆயினும் செல்வாம்பிகையின் பயத்தையும் படப்டப்பையும் மகளும் கண்டு கொள்வதாக இல்லை. யாரும் கண்டு கொள்வதாகவும் இல்லை .பரபரப்பாக எல்லா வேலைகளும் நடக்க மகள் சொன்ன பொருட்கள் எல்லாவற்றையும்
ஓடி ஆடி வாங்கி பாசல் செய்து திணித்து முடிக்க எப்படி நகர்ந்தது என்று தெரியாமல் வேகமாக நகர்ந்த நாட்கள் பிடித்து தள்ளிவிட, தாய்நாட்டிற்கு தற்காலிக விடை கொடுத்து நோர்வே வந்து சேர்ந்துவிட்டாள்.
புது நாட்டில் கால் வைத்தவளுக்கு ,என்னதான் இந்த உலகில் கொட்டிக்கிடந்தாலும் மனம் என்னவோ நமக்கு பொருத்தமானவற்றில் மட்டுமே லயிக்கும் என்பது போல் ஆச்சரியத்தில் ஆழத்திய விடயம்
புதிய நாட்டின் வயோதிபர்கள்.
இவர்களுக்கு எல்லாம் என்ன வயசிருக்கும் என்று கேட்டவளுக்கு அங்குள்ளவர்கள் சொன்ன பதில் மேலும் ஆச்சரியம் .ஆம் 60 க்கு அதிகம் என்பதே .
என்றுமே எங்குமே பாத்திருக்கவில்லை.கண்களை நம்பவே முடியவில்லை. எவ்வளவு அழகாக உடை அணிந்து இருக்கிறார்கள்.எவ்வளவு சுறுசுறுப்பாக தங்கள் வேலையை செய்கிறார்கள்.உதவி இல்லை என்று உரிக்காமல் ஓரமாக
வாரக்கணக்கில் போட்டு வைத்த தேங்காய்கள் ஞாபகத்தில் வந்து போனது.
65 வயது பாட்டி காரை எடுத்துக்கொண்டு கடைக்கு போய் சாமான்கள் வாங்கி வருவதை மேலும் கீழுமாக பார்த்தாள் செல்வாம்பிகை.பேரப்பிள்ளைகளை பாடசாலை கூட்டிபோவது,தம்பதிகளாக கடற்கரைக்கு செல்வது,வேறு நாடுகளுக்கு
இடங்கள் பார்க்க செல்வது,மேலதிகமாக பொது தொண்டுகள் செய்வது என எல்லாமே ஆச்சரியப்படுத்த உடம்பில் ஒரு உற்சாகம் பரவ அன்றுதான் 58 வயது வயோதிபம் இல்லை என்பதை உணர்ந்த்தாள்.
தொடர்ந்து எந்த மாத்திரையும் தேவைப்படவில்லை.மகிழ்ச்சியுடன் ஓடியாடி வேலைகள் செய்து கலகலப்பாக இந்தவளுக்கு கண்ணீர் பீறீட்டது காரணம் கேட்ட மகளிற்கு சொன்னாள்,
''என் தாய் தந்தையர்கள் உறவினர்கள் மூதாதையர்கள் இப்பிடியும் வாழலாம் என்று தெரியாமல் வயதாகி விட்டது வயதாகி விட்டது என புலம்பி மூலையில் முடங்கி மாண்டு விட்டார்களே என்று குழந்தை போல் குலுங்கி அழுதாள்.
Blog image
இந்த பயணம் அவள் வாழ்வு முறையையே புரட்டிப்போட்டிருந்தது .சென்ற தேவைகள் சிறப்பாய் முடிய ஊர் வந்து சேர்ந்தவளுக்கு ஒரே உற்சாகம்.வயதாகி விட்டது இனி இதெல்லாம் எதற்கு என்று வைத்திருந்த கைக்கடிகாரத்தை
எடுத்து தன் கணவனிடம் பற்றி மாத்தி தரும்படி கொடுத்தாள்.
ஆச்சரியத்துடன் இது என்ன புது வினோதம் என்று வினவிய கணவனுக்கு அனைத்தையும் புரிய வைத்தாள்.ஏன் கடைசி மூச்சு வரை ரசித்து வாழக்கூடாது என்று கேள்வி கேட்டாள்.நாங்களும் சத்தான உணவுகளை எடுத்து வளர்ந்தவர்கள்தானே
சுத்தமான காற்றை சுவாசித்தவர்கள்தானே நோயும் பிணியும் அண்டிவிட்டதாக ஏன் வரையறுத்துக்கொள்ள வேண்டும் என்றாள்.
செல்வாம்பிகை வீட்டில் இப்போது எல்லாமே மாறிப்போய் இருந்தது .மாத்திரைகள் இடம் தெரியாமல் போயிருந்தது.உதவி கேட்டு அடுத்தவர்களை நச்சரிக்கும் தேவைகள் ஒழிந்து போயிருந்தது
.குட்டி குட்டி பயணங்களும் ஆரவாரங்களும் வாழ்வை நிறைத்திருந்தது.இங்கும் வயோதிபத்தை ஓரம் கட்டி வீரமாக வாழும் பலர் கண்ணுக்கு தெரிய தொடங்கினார்கள்.

No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...