Tuesday 7 February 2017

வாழ்வும் வளமும்

எல்லோருக்கும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் நின்மதியாகவும் வாழவே ஆசை. இருப்பினும் பலருக்கு அது வெகு தூரமாகவே இருக்கிறது.
சிலருக்கு பிரச்சனைகள், துன்பங்களுக்குரிய நியாயமான காரணங்கள் இருந்தாலும் பலர் தாமே சேகரித்து மீளத் தெரியாமல் சிக்கி உழல்கிறார்கள்.
அதற்கான பல காரணங்களில் ஒன்று மகிழச்சியும் நிம்மதியும் நம்மை சுற்றி உள்ளவர்கள் நமக்கு கொடுக்க வேண்டும் என நினைப்பதும்,
நம் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் நம்மை சார்ந்தவர்கள் கெடுக்கிறார்கள் என நினைப்பதும் ஒரு பிரதான காரணம்.
இந்த மாயையில் சுலபமாக மாட்டிக்கொண்டு தங்கள் நிம்மதியை தாமே கெடுத்துக்கொள்பவர்கள் அதிகமாக பெண்களாகவே இருக்கிறார்கள்.
இவர்களது தலையாய பிரச்சனைகள் என்னவென்று பார்த்தால் மாமியார் சரியில்லை, என் குடும்பத்தை மதிப்பதில்லை, நான் எவ்வளவுதான் குடும்பத்திற்காக உழைத்தாலும் எனக்கு தேவையான மதிப்பு அளிப்பதில்லை,
தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்கிறார்கள், என்னை குற்றம் சொல்கிறார்கள், எனக்கு சுதந்திரமில்லை, உரிமையில்லை, பெண்களை இந்த சமூகம் ஊதாசீனப்படுத்துகிறது, வீட்டிற்கு தலைமை வகிக்கும் ஆண்கள் நம்மை ஏளனம் செய்கிறார்கள், வீட்டு வேலைகள் குழந்தைகளை பராமரிப்பதில் எனக்கு யாரும் ஒத்தாசை செய்வதில்லை ஆனால் குறை சொல்வதற்கு முன்னிற்கு நிற்கிறார்கள், என் உடல் நிலையையும் சோர்வையும் ஏறிட்டு பார்ப்பதில்லை என் ஆசைகளை நிராகரிக்கிறார்கள் இவைகள்தாம் நம்மில் அனேகமானவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்.
ஆனால் இவை எல்லாம் நாம் முன்னெடுக்கும் செயல்களாலும், சிந்தனைகளாலுமே நமக்கு இது பிரச்சனைகளாக விஷ்வரூபம் எடுக்கிறது. குறிப்பாக நம் பெண்கள் அனேகர் இங்கு கூறப்பட்ட அனேகமான பிரச்சனைக்குள்
திக்குமுக்காடுவதற்கு மூல காரணம் பொருளாதார ரீதியிலும், இன்ன பிற தேவைகளிலும் சார்ந்து வாழுதல். இதிலிருந்து மீள ஆண்களுக்கு சரியாக வருவாய் ஈட்ட வேண்டும் என்பதல்ல. மிக மிக குறைந்த வருவாய் வீட்டில் இருந்த படியே கூட சூழ்நிலைக்கு ஏற்றவாறு பொழுது போக்காக சிறு கைத்தொழில் செய்வதில் எந்த தவறும் இல்லை. இவ்வளவு படித்து விட்டு இதை செய்வதா என்று எண்ணக்கூடாது. சரி அதற்கும் நம் சூழ்நிலை ஒத்துக்கொள்ளவில்லை என்றால் வீட்டிற்கு செலவாகும் சில பொருட்களையோ காய்கறிகளையோ நாமே தயாரிப்பது மிகச்சிறந்த வழி. இதற்கு கணவர் அதிகம் சம்பாதிக்க அல்லது பிஸ்னஸ் ல் இருக்கும் போது நான் ஏன் இதையெல்லாம் செய்து சிரமப்பட வேண்டும் என்று நினைக்க கூடாது. தனித்து செய்யக்கூடிய
சில பயணங்கள் கொள்வனவுகள் வெளிவேலைகளை நாமே செய்து கொள்வது நமக்கும் குடும்பத்திற்கும் பக்க பலம்.
Blog image
அடுத்து நம் பாதிப் பிரச்சனைகளை தூக்கி முழுங்கி நம்மை அறியாமல் நம் பிரச்சனைகளை நீக்கும் ஒரு அருமருந்து பொழுது போக்கு. ஆம் சிலர் அவர்கள் இப்படி சொல்லி விட்டார்கள் இவர்கள் இப்பிடி சொன்னார்கள்
ஒரே கவலையாக இருக்கிறது என்னால் மறக்க முடியவில்லை என்பார்கள். மறக்க வேண்டுமா எதுவுமே வேண்டாம் ஒரு தக்காளியை நட்டு வையுங்கள் அது உங்கள் சிந்தனையை ஆக்கிரமிக்கும். அதன் வளர்ச்சி உங்களோடு பேசும். அழகான ஒரு பூ செய்து மேசையில் வைத்துப்பாருங்கள் உங்கள் பார்வை அடிக்கடி அதில் மோதும். சமையலில் ஏதாவது மாற்றம் செய்து அழகு படுத்தி பாருங்கள் யாரும் பாராட்டாமல் விட்டாலும் பரவாயில்லை உங்களுக்கே ஒரு பெருமிதம் தோன்றும். ஆகவே நல்ல பொழுதுபோக்குகளை உங்கள் சூழ்னிலைக்கு ஏற்றால்போல் தேர்ந்தெடுங்கள் அது உங்கள் கவலைகளை வாங்கிக்கொள்ளும்.
எல்லாவற்றையும் விட நம் சிறு சிறு பிரச்சனைகளையும் பெரிதாக நம்மில் திணிக்க வைக்கும் ஒரு விடயம் நம் புலம்பல்கள் என்பது பலருக்கு தெரியாது. அதாவது கவலைகள் பகிர்ந்து கொள்வதால் ஆறுதல் அடைவீர்கள் என்று
சொல்லப்படுவது நோய், மரணங்கள், இழப்புகள் என்பவற்றைத்தான் உங்கள் குடும்பத்தில் நாளாந்தம் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளோ குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு ஏற்படும் இடையூறுகளோ அல்ல.
இதையெல்லாம் எவ்வளவுக்கு எவ்வளவு அடுத்தவர்களிடம் புலம்புகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்த பிரச்சனைகளில் நீங்கள் மூழ்கிப்போய் நிம்மதி இழப்பீர்கள். அதாவது உங்களை அறியாமலே மறக்க வேண்டியதையும்
தூக்கி போட்டு கடந்து போக வேண்டியதையும் அநியாயத்திற்கு மீள்பதிவு செய்து வைக்கிறீர்கள் என்று அர்த்தம். அவ்வாறு உங்கள் சகாக்களுடன் பேசும்போது அவர்களும் அவ்வாறுதான் பேசப் போகிறார்கள். அப்படியாயின் உங்கள் சக நண்பி சொல்கிறார் என் கணவருக்கு எப்போதும் சாப்பாட்டில் குறை சொல்வதே வேலை. எரிச்சலாக வருகிறது என்று கூறுவாராயின் நீங்களும் அதே தலைப்பில் நிச்சயம் இணைந்து கொள்வீர்கள். இவ்வாறான பேச்சுக்கள் ஆரோக்கியம் அற்றவை. உங்கள் கணவர் காது பட அவரைப்பற்றி நல்லதாக அடுத்தவர்களிடம் சொல்லிப்பாருங்கள். ஏன் உங்கள் கணவரை நேரடியாகவே பாராட்டுங்கள் என்ன என்ன நல்ல குணங்கள் உள்ளதாக சொல்கிறீர்களோ அந்த குணங்கள் இல்லாவிட்டாலும் ஏற்படுத்திக்கொள்வார்கள். அது உங்களுக்கு மிகப்பெரிய நின்மதியை கொடுக்கும். குடும்ப உறுப்பினர் யார் குறையையுமே சொல்லிக்காட்டாதீர்கள்.
நம்மிலும் பல குற்றம் குறைகள் இருக்கவே இருக்கும் பதிலுக்கு நம்மை நின்மதி இழக்கச்செய்து விடுவார்கள்.பொது விடயங்கள் பொழுதுபோக்குகள், சுற்றுலாக்கள் பற்றிய பேச்சுக்கள் கேள்விகள் சுவாரஸ்யமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
செய்யும் ஒவ்வொரு வேலைகளையும் விரும்பி ரசித்து செய்து விட்டு நீங்களே உங்களை பாராட்டிக்கொள்ளுங்கள். யாரும் நமக்கு உதவ வேண்டும் எதையாவது வழங்க வேண்டும் ஒத்தாசை செய்தே ஆக வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்காமல் முடிந்தளவு நாமே பொறுப்பாக இருக்கும்போது சிரமப்பட்டாலும் நாளடைவில் அதில் மிகப்பெரிய நிம்மதி கிடைக்கும்.
Blog image
கிடைப்பதை மாற்ற முடியாததை விரும்பி ஏற்றுக்கொள்ளுங்கள். ஆண்கள் திருமணத்தின் பின்னும் நண்பர்களை இழப்பதில்லை நாம் மட்டும் இழக்க வேண்டி இருக்கிறதே என்று ஆண் வர்க்கத்தை சாடாதீர்கள்.
அதைவிட சந்தோசமாக குழந்தைகளுடன் கூடி மகிழும் பாக்கியத்தை கடவுள் பெண்களுக்கே அதிகம் தந்திருக்கிறான் என்று மகிழுங்கள். ஆண்கள் திருமணத்தின் பின் ஊரையும் குடும்பத்தையும் வளர்ந்த வீட்டையும்
பிரிவதில்லை நம்மை மட்டும் வேரோடு பெயர்க்கிறார்கள் என்று வருந்தக்கூடாது. நமக்கு மாறுபட்ட வாழ்வு மாறுபட்ட இடங்கள் மாறுபட்ட மனிதர்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்று
ஆனந்தப்படுங்கள். கணவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தால் அங்கு செல்வதை சந்தோசமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்றால் இந்த பிரிவையும் ஏற்றுகொள்ள முடியும். நிறைய ஆண்கள் திருமணத்திற்கு
முன்பே பொருளாதார நிமித்தம் பிரிகிறார்கள்.
இவை எல்லாமே நம்மை நாமே நிம்மதியாக வைக்க உதவும். நம்மைப்பற்றி நாமே அக்கறை கொள்ளாமல் மறைமுக சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு அடுத்தவர்களை சாடுவது தவறு. பெண்களுக்கான உரிமை
பெண்களிடம்தான் உள்ளது. மீறி நடக்கும் தவறுகளும் கேடுகளும் அசம்பாவிதங்களும் தவறானவர்களால் நடக்கிறது. ஆண்கள் எல்லோரும் ஆதிக்க வாதிகள் கிடையாது. அப்பாவின் தியாகங்களை போற்றியும் கணவனை
குறை சொல்லியும் வாழ்ந்துவிட்டு திரும்பிப்பார்த்தால் கால ஓட்டத்தில் நம் பிள்ளைகள் தங்கள் அப்பாவை புகழ்ந்து கொண்டிருப்பார்கள். அப்போது உணர்வதை விட இப்போதே உணர்ந்தால் வாழ்வை அழகாக வாழ்ந்து விடலாம்.
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...